செய்திகள்
அகமதாபாத்தில் கோவில் வளாகத்திற்குள் நடந்த ஜெகநாதர் தேரோட்டம்- முதல்வர் பங்கேற்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்ற தேரோட்டத்தை முதல்வர் விஜய் ருபானி துவக்கி வைத்தார்.
அகமதாபாத்:
உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை நடத்தும் அதேசமயத்தில் ஆண்டுதோறும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலிலும் தேரோட்டம் நடப்பது வழக்கம். ஆனால், ரத யாத்திரையை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. எனவே, அரசு விதிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்திலேயே ரத யாத்திரை நடத்தப்பட்டது.
முதல்வர் விஜய் ருபானி கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டனர்.
பூரி ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன், அகமதாபாத்திலும் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்கும்படி ஐகோர்ட் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக தேரோட்டதை பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.