செய்திகள்
பாராளுமன்றம்

இந்திய-சீன மோதல் விவகாரம்: பாராளுமன்ற நிலைக்குழுவை கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Published On 2020-06-22 03:29 GMT   |   Update On 2020-06-22 03:29 GMT
பாராளுமன்ற நிலைக்குழுவை கூட்டி இந்திய-சீன மோதல் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி :

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் இடையே நடந்த மோதல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற நிலைக்குழுவை கூட்டி இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து புரட்சிகர சோசலிச கட்சி எம்.பி. பிறேமச்சந்திரன் கூறுகையில், ‘லடாக் மோதல் விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இது தொடர்பாக வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். இதில் வெளியுறவு மற்றும் ராணுவ செயலாளர்கள் வந்து நிலைமை குறித்து விவரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், இந்த கூட்டத்தில் மேலும் சில அதிகாரிகளை அழைக்கவும் உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இந்த நேரத்தில் இந்த கூட்டத்தை நடத்துவது சாத்தியமற்றது என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News