செய்திகள்
கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத் துறை மந்திரி உடல்நிலையில் முன்னேற்றம்
சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டெல்லி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. இரண்டாவது நாளில் (ஜூன் 17) நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நுரையீரல் தொற்று இருந்தது தெரியவந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கான சிறப்பு சிகிச்சையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.