செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 62.4 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல்

Published On 2020-06-18 05:44 GMT   |   Update On 2020-06-18 05:44 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,65,412 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 366946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 334 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12237 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 194325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 52.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 160384 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று வரை 62,49,668 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,65,412 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

கொரோனா அறிகுறி தொடர்பாக அதிக சாம்பிள்கள் பரிசோதனை செய்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டனைத் தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News