செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடக காங்கிரஸ் தலைவராக வருகிற 2-ந் தேதி பதவி ஏற்கிறேன்: டி.கே.சிவக்குமார்

Published On 2020-06-18 04:41 GMT   |   Update On 2020-06-18 04:41 GMT
கர்நாடக காங்கிரஸ் தலைவராக நான் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்க உள்ளேன். இந்த பதவி ஏற்பு விழா எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவராக நான் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்க உள்ளேன். இதற்கான பதவி ஏற்பு விழா அன்றைய தினம் பெங்களூருவில் நடக்கிறது. இந்த விழா, மாநிலம் முழுவதும் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், ஜூம் செயலி மூலம் பதவி ஏற்பு விழாவை நேரடியாக பார்க்க முடியும்.

இந்த விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் வருகிற 25-ந் தேதி முதல் மேற்கொள்ளப்படும். 2-ந் தேதி நடைபெறும் இந்த பதவி ஏற்பு விழா எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது. தனிமனித விலகலை பின்பற்றி விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எனது விழா அல்ல. இது காங்கிரஸ் விழா. தொண்டர்களின் விழா.

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். தலைவர்கள் அனைவரும், தாங்கள் தலைவர்கள் என்பதை மறந்து தொண்டர்கள் என்று கருதி பணியாற்ற வேண்டும். தொண்டர்களின் பலத்தில் தான் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கொடியே எங்களின் மதம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News