செய்திகள்
டிகே சிவக்குமார்

எனது பதவி ஏற்பு விழா தேதியை முடிவு செய்யவில்லை: டி.கே.சிவக்குமார்

Published On 2020-06-15 03:22 GMT   |   Update On 2020-06-15 03:22 GMT
எனது பதவி ஏற்பு விழா தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மூத்த தலைவர்கள், செயல் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தேதியை முடிவு செய்வேன் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் அலுவலகம் குயின்ஸ் ரோட்டில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு பின்புறத்தில் இருந்த நிலத்தில் காங்கிரஸ் புதிய அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டிடத்தில் நேற்று பூஜை நடைபெற்றது. இதில் அந்த அலுவலகத்தில் புரோகிதர்களால் தீயிட்டு ஹோமம் நடத்தப்பட்டது.

பூஜைகளை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிறைவேற்றினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்கவில்லை. இந்த பூஜையில் பங்கேற்ற பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது பதவி ஏற்பு விழா தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மூத்த தலைவர்கள், செயல் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தேதியை முடிவு செய்வேன். எங்கள் கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். பதவி ஏற்பு விழா தேதியை விரைவில் முடிவு செய்வேன்.

எங்கள் கட்சியின் புதிய அலுவலகத்தில் இன்று (நேற்று) பூஜை நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பூஜை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News