செய்திகள்
டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு

Published On 2020-06-10 03:59 GMT   |   Update On 2020-06-10 03:59 GMT
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் 3 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு டி.கே.சிவக்குமார் மாநில அரசிடம் கேட்டார். ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார். அன்றைய தின நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசிடம், டி.கே.சிவக்குமார் ஒரு கடிதம் வழங்கி, தான் 14-ந் தேதி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் டி.கே.சிவக் குமாரின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அரசு மீண்டும் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமாருக்கு மாநில அரசு சார்பில் அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில், “கொரோனாவை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மத, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது. அதனால் உங்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.கே.சிவக்குமார், கர்நாடக அரசு அரசியல் வழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News