செய்திகள்
விபத்தில் உருக்குலைந்த வாகனங்கள்

உத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

Published On 2020-06-05 05:40 GMT   |   Update On 2020-06-05 05:40 GMT
உத்தர பிரதேசத்தில் இன்று லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர்.
பிரதாப்கர்:

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே இன்று லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காருக்குள் இருந்தவர்களில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் நசுங்கியிருந்ததால், கேஸ் கட்டர் மூலம் அதன் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே உடல்களை மீட்க முடிந்தது. காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்தில் இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பீகார் மாநிலம் போஜ்பூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வேதனையை தெரிவித்ததுடன், காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News