செய்திகள்
உத்தவ் தாக்கரே

நிசர்கா புயல் பாதிப்பு- ராய்காட் மாவட்டத்தில் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு செய்கிறார்

Published On 2020-06-05 03:39 GMT   |   Update On 2020-06-05 03:39 GMT
நிகர்கா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
மும்பை:

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் நேற்று முன்தினம் கரைகடந்தது. இந்த புயல் காரணமாக ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

மும்பை, தானே, பால்கர், புனே, நாசிக், அகமது நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த புயலால் மகாராஷ்டிராவில் மட்டும் 72.5 மிமீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசர்கா புயல் மற்றும் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78191 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் புயல், மழை தொடர்பான விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டபகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.



இந்நிலையில், புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தில் சேத பகுதிகளை முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். மேலும் அங்குள்ள பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களை ஆய்வு செய்த பின்னர், மாவட்ட நிர்வாகிகளுடன் அலிபாக்கில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News