செய்திகள்
உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- மத்திய அரசுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-06-03 08:24 GMT   |   Update On 2020-06-03 10:35 GMT
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பும்படி கூறியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி டெல்லியைச் சேர்ந்த நமா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்தியா என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை "பாரத்" என மாற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

‘நாட்டின் பெயர்கள் வெவ்வேறு ஆவணங்களில் வெவ்வேறு விதமாக உள்ளன. ஆதார் அட்டையில் 'பாரத் சர்க்கார்' என்று உள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் 'யூனியன் ஆஃப் இந்தியா', பாஸ்போர்ட்டுகளில் 'இந்திய குடியரசு' என இருப்பது குழப்பத்தை உருவாக்குகிறது. ஒருவர் தேசத்தின் பெயரை அறிந்து கொள்ள ஒரே மாதிரியான பெயர் இருக்க வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும். நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேசமயம், நாட்டின் பெயரை பாரத் என மாற்றக் கோரிய மனுவின் நகலை, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த மனுவை கோரிக்கை மனுவாக கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News