செய்திகள்
உத்தவ் தாக்கரே

மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

Published On 2020-06-02 03:03 GMT   |   Update On 2020-06-02 03:03 GMT
ஊரடங்கில் கூடுதல் தளர்வு காரணமாக, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
மும்பை :

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிராவில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில் கொரோனா கட்டுப்பாடு அல்லாத மண்டலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாநில மக்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கிற்கு, ‘மிஷன் பிகின் அகெய்ன்' என பெயரிட்டு இருக்கிறது. இது மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்குவதை நோக்கமாக கொண்டதாகும். இதன்படி வருகிற 5-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் கடைகள், சந்தைகள், அலுவலகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

கடைகள், சந்தைகள் மற்றும் அலுவலகங்கள் திறப்பதற்கு அனுமதி அளித்து இருப்பது நாம் எவ்வாறு செயல்பட்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்கான சோதனை தான். எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு குப்பை தொட்டியில் வீசப்பட வேண்டும். ஊரடங்கு அறிவியல் என்றால் அதை திரும்ப பெறுவது ஒரு கலை.

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தொடர்பாக நான் துணைவேந்தர்களுடன் பேசினேன். நான் முதல்-மந்தியாக இருக்கலாம். அவர்கள் துணைவேந்தர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் பெற்றோர்கள். நம் பிள்ளைகள் துன்பப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. தேர்வு நடந்து இருந்தால் சிறப்பாக எழுதியிருப்பேன் என நினைக்கும் மாணவர்களுக்கு கொரோனா நிலைமை சரியானதும் வாய்ப்பு வழங்கப்படும். கொரோனா தொற்று இல்லாத கிராமப்புறங்களில் பள்ளிகளை திறக்கலாம். நகரங்களில் இ-கற்றல் முறைக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

கடந்த 2 மாதங்களாக மாநில அரசின் முழுகவனமும் கொரோனா தொற்றுநோயை தடுப்பதில் தான் உள்ளது. கொரோனா சோதனை மற்றும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News