செய்திகள்
உச்ச நீதிமன்றம்

ஊருக்கு செல்லும்வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

Published On 2020-05-28 10:23 GMT   |   Update On 2020-05-28 10:23 GMT
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வரை அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாணை நடத்துகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தாலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்புடையதாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரெயில் கட்டணத்தை யார் செலுத்துவது? என்பது தொடர்பாக தெளிவான கொள்கை முடிவு தேவை. தொழிலாளர்களுக்கான ரெயில் கட்டண விவகாரத்தில் இடைத்தரகர்களின் குறுக்கீட்டை நீதிமன்றம் விரும்பவில்லை. அனைத்து தொழிலாளர்களையும் சொந்த ஊர்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியாது என்பதை ஏற்கிறோம். ஆனால், அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வரை அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் உறைவிடம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை ரெயில்வே சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News