செய்திகள்
முதல்-மந்திரி பினராய் விஜயன்

கேரளாவுக்குள் அனுமதியின்றி நுழைந்தால் 28 நாள் கட்டாய தனிமை : பினராய் விஜயன் எச்சரிக்கை

Published On 2020-05-27 08:44 GMT   |   Update On 2020-05-27 08:44 GMT
கேரளாவுக்குள் அனுமதியின்றி நுழைவோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை 28 நாள் கட்டாய தனிமை முகாமில் தங்க வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

கேரளாவில் குறைந்திருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இங்கு 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 415 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-



கேரளாவில் இருந்து வெளிநாடுகளில் தங்கி இருப்போரில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் கேரளா திரும்ப விருப்பம் தெரிவித்து முன் பதிவு செய்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக இங்கு அழைத்து வரமுடியாது.

எனவே தான் பதிவு செய்தவர்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அழைத்து வருகிறோம்.

இதுபோல வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வர 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 1789 பேர் கேரளா வந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்களில் தமிழ்நாட்டில் இருந்த வந்த 71 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.

எனவே தான் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருவோர் கட்டாயமாக முன்பதிவு செய்து வரவேண்டும் என கூறியுள்ளோம். அதையும் மீறி சிலர் கேரள எல்லைகள் வழியாக முறைகேடாக கேரளாவுக்குள் நுழைகிறார்கள்.

இவ்வாறு நுழைவோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்களை 28 நாள் கட்டாய தனிமை முகாமில் தங்க வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இத்தேர்வினை எழுத தவறிய மாணவ-மாணவிகள் கவலைப்பட வேண்டாம். அவர்களும் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News