செய்திகள்
வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி

அம்பன் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் அறிவிப்பு

Published On 2020-05-22 08:22 GMT   |   Update On 2020-05-22 08:22 GMT
மேற்கு வங்காளத்தில் அம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் பசிர்ஹத் பகுதியில் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன், முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தங்கார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்று கூறினார்.

‘அம்பன் புயல் வங்காள தேசத்தின் பல்வேறு பகுதிகளை மோசமாக பாதித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும், 80 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்துவதற்காக, மத்திய அரசால் ஒரு குழு அனுப்பப்படும். மாநிலத்தின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு மேற்கு வங்காளம் முன்னேற வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்’ என்றும் மோடி கூறினார்.
Tags:    

Similar News