செய்திகள்
பயங்கரவாதிகள் மறைவிடம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு- 5 பயங்கரவாதிகள் கைது

Published On 2020-05-16 09:43 GMT   |   Update On 2020-05-16 09:43 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்ததுடன், லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள அரைசால் கான்சாயிப் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் இருந்து சிறிது தொலைவில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்தனர். அந்த வீட்டின் உரிமையாளரான ஜஹூர் வானியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். 

விசாரணையில் அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஆதரவாளர் என்பதும், பயங்கரவாதிகள் மறைந்திருக்க இடம் மற்றும் பொருட்கள் கொடுத்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன்பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாகவும், இந்த குழு கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் செயல்பட்டு வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News