செய்திகள்
உச்ச நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-05-15 07:26 GMT   |   Update On 2020-05-15 07:26 GMT
டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. 

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



‘டாஸ்மாக்கில் மது விற்பனை செய்வதற்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை. ஆன்லைனில் விற்பனை செய்தால் கலப்பட மது விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் மது கடத்தலும் அதிகரிக்கும். டாஸ்மாக் திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு’ என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து தமிழக அரசின் மனு மீதான உத்தரவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர். இன்று மாலைக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News