100 சதவீத கடன்களையும் திருப்பி செலுத்திவிடுகிறேன்- மத்திய அரசிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்
புதுடெல்லி:
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்களை நடத்தி வரும் அவர், பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். விஜய் மல்லையா பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார்.
அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்துவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த அங்குள்ள கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, அவர் லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் 100 சதவீத கடன்களையும் திருப்பி செலுத்தி விடுகிறேன். எனக்கு எதிரான அனைத்து வழக்குகளை முடித்துவிடுங்கள் என்று மத்திய அரசிடம் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தற்காக நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இந்திய அரசு அவர்களின் தேவைக் கேற்றார் போல் ரூபாய் நோட்டுக்களை அச்சிடலாம். ஆனால் என்னை போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீத கடனை வங்கிகளிடம் திருப்பி செலுத்துகிறேன் என பல முறை கோரிக்கை விடுத்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
நான் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்தி விடுகிறேன். நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும், கைவிடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் மல்லையா கூறினார்.