செய்திகள்
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்கவில்லை- காரணம் இதுதான்
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கவில்லை.
புதுடெல்லி:
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறியதால் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு, வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கும்படி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மனுவில் உள்ள பிழையை சரி செய்து இன்று புதிய மனுவை தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.