செய்திகள்
அமித்ஷா

நான் பூரண உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித்ஷா

Published On 2020-05-09 11:35 GMT   |   Update On 2020-05-09 11:35 GMT
உள்துறை மந்திரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் தான் நலமுடன் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில அரசுகளுடனும் காணொலி காட்சி மூலம் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.  

இதற்கிடையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கடந்த சில நாட்களாக உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்கவில்லை. 



மேலும், அவர் உள்துறை அமைச்சக நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அமித்ஷா ஊடகங்களின் கண்களில் பட்டு பல நாட்கள் ஆகி விட்டது. 

இதனால் அமித்ஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் தான் அவர் எந்தவித மத்திய அரசு கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமித்ஷா இன்று அறிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என பரவியது தவறான தகவல் என்றும், தான் எந்த வித நோயாளும் பாதிக்கப்படவில்லை எனவும், பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News