செய்திகள்
பாஜக

எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் 4 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2020-05-09 03:42 GMT   |   Update On 2020-05-09 03:42 GMT
மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் 4 பாரதீய ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
மும்பை :

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் மூலம் சட்டசபை மற்றும் சட்ட மேல்-சபையில் உறுப்பினராக இல்லாத முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக தேர்வாகி தனது முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொள்ள வழி பிறந்துள்ளது.

இதன்படி 2 எம்.எல்.சி. பதவிகளுக்கு சிவசேனா வேட்பாளர்களாக உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா 4 இடங்களுக்கு எம்.எல்.சி. வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ரஞ்சித்சிங் மொகிதே, கோபிசந்த் படல்கர், பிரவீன் தட்கே, அஜித் கோப்ச்கடே ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ரஞ்சித்சிங் மொகிதே முன்னாள் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஆவார்.

மற்றவர்கள் கட்சியில் பெரியளவில் அறிமுகம் இல்லாதவர்கள். பாரதீய ஜனதாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக கருதப்படும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, முன்னாள் மந்திரிகள் வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே, சந்திரசேகர் பவன்குலே ஆகியோர் எம்.எல்.சி. தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஏக்நாத் கட்சே நேரடியாக தான் எம்.எல்.சி.யாக விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் அவர்கள் 4 பேருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News