செய்திகள்
போர் விமானம் விழுந்த இடம்

வயலில் விழுந்து தீப்பிடித்த இந்திய போர் விமானம்- பைலட் உயிர் தப்பினார்

Published On 2020-05-08 09:21 GMT   |   Update On 2020-05-08 09:21 GMT
பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சியின்போது இந்திய விமானப்படை போர் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.
ஜலந்தர்:

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்தில் இருந்து, மிக்-29 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஒரு பைலட் மட்டும் விமானத்தில் பயணித்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுகார்பூர் கிராமத்திற்கு மேலே பறந்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக பாய்ந்தது. சிறிது நேரத்தில் வயல்வெளியில் விழுந்தது. விமானம் தரையை தொடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக, பைலட் பாராசூட் மூலம் வெளியே குதித்தார். இதனால் அவர் காயங்களுடன் உயிர்தப்பினார். கீழே விழுந்த விமானம் சிதறி தீப்பிடித்தது. 



கீழே குதித்ததில் காயமடைந்த பைலட்டை கிராம மக்கள் மீட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News