செய்திகள்
விசாகப்பட்டினம் சம்பவம்- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்து 8 பேர் மரணம் அடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து காற்றில் கலந்தது. இதனை சுவாசித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு ஆலையில் வாயு கசிந்து பல உயிர்கள் பலியானது தொடர்பாக வந்த செய்தியால் வேதனை அடைந்தேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்ப்டடவர்கள் குணமடையவும், அனைவரின் பாதுகாப்பிற்கும் பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடிந்த அனைத்தையும் நிர்வாகம் செய்து வருகிறது என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விசாகப்பட்டினத்தில் உள்ள நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பேசினேன். அப்பகுதியில் உள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.