செய்திகள்
நிர்மலா சீதாராமன்

தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி: நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2020-04-30 03:27 GMT   |   Update On 2020-04-30 03:27 GMT
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத வங்கி கடன் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை தள்ளுபடி செய்தது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

புதுடெல்லி :

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத வங்கி கடன் ரூ.68 ஆயிரத்து 607 கோடி தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் அதை திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் அந்த பணத்தை வேறு வழிகளில் பயன்படுத்தி சொத்துகளை வாங்கி உள்ளனர். வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் பணத்தை சுருட்டிவிட்டனர்.

பாராளுமன்றத்தில் 18-11-2019-ந் தேதியன்று அளிக்கப்பட்ட பதிலில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்ற திருப்பி செலுத்தாத கடன் தொழில்நுட்ப ரீதியாகவும், விவேக நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து இணைப்பு பதிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது நடைமுறைகளின்படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான். அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும். கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த நடைமுறை பற்றி மன்மோகன் சிங்கிடம் ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ.8,040 கோடி சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.1,693 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தப்பி ஓடிய குற்றவாளியான அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மெகுல் சோக்சி வழக்கில் ரூ.1,936 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.597 கோடியே 75 மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆன்டிகுவா நாட்டில் உள்ள அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

நிரவ் மோடி வழக்கை பொறுத்தமட்டில் ரூ.1,898 கோடி சொத்துகள் முடக்கப்பட்டு, ரூ.489 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர் இங்கிலாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News