செய்திகள்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 7500 ரூபாய் வழங்க வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலமாக இன்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-
போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நேரத்தில், பாஜக வெறுப்பு மற்றும் வகுப்புவாத வைரசை பரப்புகிறது.
முதற்கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 7,500 ரூபாயை வழங்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊரடங்கின் வெற்றி மற்றும் கொரோனா வைரசை சமாளிக்கும் திறனைப் பற்றி இறுதியாக தீர்மானிக்கப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.