செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி - காஷ்மீரில் தர்பார் மாற்றம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், காஷ்மீரில் வழக்கமாக நடைபெறும் தர்பார் மாற்றம் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் காலத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீருக்கு உள்பட்ட பகுதியை ஆண்டுவந்த மகாராஜா குலாப் சிங் என்பவர் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் 1872-ம் ஆண்டில் அறிவித்தார்.
இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தலைநகரத்தை மாற்றும் நிகழ்வு ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது. மாநில கவர்னர் மாளிகை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவது சுமார் 150 ஆண்டுகால நடைமுறையாக இருந்து வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. கடந்த நவம்பரில் அங்கு தர்பார் மாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், காஷ்மீரில் வழக்கமாக நடைபெறும் தர்பார் மாற்றம் ஜூன் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் காஷ்மீரில் வழக்கமாக நடைபெறும் தர்பார் மாற்றம் ஜூன் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.