செய்திகள்
கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீள ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை வென்று புதிய சுகாதாரமான உலகம் உருவாக ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் 2 நாள்களே மீதமுள்ளன.
இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை வென்று புதிய சுகாதாரமான உலகம் உருவாக ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், ஈஸ்டர் சிறப்பு நிகழ்வில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொரோனாவை வென்று புதிய சுகாதாரமான உலகம் உருவாக ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும். ஏழைகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயேசுவின் உன்னதமான எண்ணங்களை நினைவில் கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா எதிரொலியாக ஈஸ்டர் பண்டிகையான இன்று நாடு முழுவதும் உள்ள சர்ச்சுகள் மூடப்பட்டு உள்ளன.