செய்திகள்
கொரோனா வைரஸ்

மாநிலங்களுக்கு மேலும் ரூ.15,000 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2020-04-09 15:50 GMT   |   Update On 2020-04-09 15:50 GMT
கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டாவது கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே, கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டாவது கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இத்தொகை 3 தவணைகளாகப் பிரித்துக் கொடுக்கப்படும். இத்தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News