செய்திகள்
சோனியா காந்தி, மோடி

சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2020-04-07 09:31 GMT   |   Update On 2020-04-07 09:31 GMT
கொரோனாவுக்கு எதிரான போருக்கு அதிக நிதி தேவைப்படுவதால் சிக்கன நடவடிக்கைகள் அவசியம் என பிரதமருக்கு சோனியா காந்தி யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 5 முக்கிய பரிந்துரைகளையும் அவர் வழங்கி உள்ளார்.

எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியா, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளை திரட்டுவதற்கு, சிக்கன நடவடிக்கைகள் தேவை என்று கூறி உள்ளார்.

குறிப்பாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறி உள்ள அவர், இந்த தொகை புதிய மருத்துவமனை உள்கட்டமைப்புகளை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த விளம்பரங்களுக்கு தடை விதித்து நிதியை சேமிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கூறி உள்ளார்.

பிரதமர் கேர்ஸ் நிதியத்தில் (PM Cares Fund) உள்ள அனைத்து பணத்தையும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றி, செயல்திறன், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News