செய்திகள்
கோப்புபடம்

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு

Published On 2020-04-05 18:18 GMT   |   Update On 2020-04-05 18:18 GMT
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படுகிறது.  மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பினால் பாதிப்பு கட்டுக்குள் வரும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன.

இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 537 ஆக நேற்று இருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 485 ஆகவும், கேரளாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 306 ஆகவும் இருந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,072 ஆக உயர்ந்தது.

இதேபோன்று பலி எண்ணிக்கை நேற்று வரை 75 ஆக உயர்ந்து இருந்தது.  இவற்றில் 42 சதவீதத்தினர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.  32 சதவீதத்தினர் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.  பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 சதவீதத்தினராகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 சதவீதத்தினராகவும் உள்ளனர் என அமைச்சகம் தெரிவித்தது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் இன்று உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,577 ஆக உயர்ந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News