செய்திகள்
பிரதமர் நிவாரண நிதிக்கு சுப்ரீம் கோர்ட் அலுவலர்கள் 1 கோடி ரூபாய் நிதியுதவி
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு சுப்ரீம் கோர்ட் அலுவலர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
புதுடெல்லி:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு உதவ நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு சுப்ரீம் கோர்ட் அலுவலர்கள் ஒரு கோடியே 61 ஆயிரத்து 989 ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 33 பேர் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.