செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலமாக நடந்த இந்த ஆலோசனையின்போது, கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், மாநில ஆளுநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இந்த ஆலோசனையின்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றார்.
பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.