செய்திகள்
டெல்லி நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் அமைப்பின் மீது டெல்லி போலீசார் வழக்கு
டெல்லி நிஜாமுதீனில் செயல்பட்டு வரும் தப்லிகி ஜமாத் அமைப்பின் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி நிஜாமுதீனில் செயல்பட்டு வரும் தப்லிகி ஜமாத் அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.