செய்திகள்
உடலை பேண உதவும் யோகா வீடியோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி

ஊரடங்கு உத்தரவு: உடலை பேண உதவும் யோகா வீடியோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி

Published On 2020-03-31 03:41 GMT   |   Update On 2020-03-31 03:41 GMT
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓய்வான நேரத்தில் யோகா செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ‘3டி’ யோகா வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி :

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓய்வான நேரத்தில் யோகா செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ‘3டி’ யோகா வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். வானொலியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவருக்கு சிலர் அனுப்பிய கடிதங்களில் ஓய்வு நேரத்தில் யோகா செய்வது குறித்த வீடியோக்களை பதிவிடலாம் என்று ஆலோசனை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் யோகா குறித்த ‘3டி’ வீடியோக்களை பதிவிட்டு உள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்ட கருத்தில், “மனதின் குரல் நிகழ்ச்சியின்போது சிலர் என்னிடம் ஊரடங்கின்போது நான் உடலை எவ்வாறு கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறேன் என்று கேள்வி எழுப்பினர். அதற்காக இந்த வீடியோக்களை பகிர்கிறேன். நீங்களும் யோகா பயிற்சியை நாள்தோறும் தொடருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் உடல் ஆரோக்கியம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், “யோகா மூலமே நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் உடற்பயிற்சி நிபுணர் இல்லை. நான் யோகா ஆசிரியரும் அல்ல. நானும் யோகா செய்யக்கூடிய ஒருவர். சில ஆசனங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. என்னுடைய இந்த அறிவுரைகள் ஊரடங்கின்போது உடல் நலனை பேண உங்களுக்கு உதவக்கூடும்” என தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச யோகா தினத்தையொட்டி இதேபோன்று ‘3டி’ யோகா வீடியோக்களை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News