செய்திகள்
மும்பையில் 10000 ஹேண்ட் சானிடைசர் பாட்டில்கள் பதுக்கல்- 2 பேர் கைது
மும்பையில் 10 ஆயிரம் ஹேண்ட் சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை:
கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அடிக்கடி கை கழுவ வேண்டிதன் அவசியத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, ஹேண்ட் சானிடைசர்கள், ஹேண்ட்வாஷ்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதன் தேவையும் அதிகரித்திருப்பதால் பல இடங்களில் அதனை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மும்பை சார்கோப் போலீசார் நடத்திய சோதனையில் 10000 பாட்டில்கள் ஹேண்ட் சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அவற்றை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பதுக்கல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.