செய்திகள்
முதியவர்கள்

கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி? - முதியவர்களுக்கு அறிவுரை வழங்கிய மத்திய சுகாதாரத்துறை

Published On 2020-03-30 07:53 GMT   |   Update On 2020-03-30 07:53 GMT
கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து முதியவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,000 எட்டியுள்ளது. 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களில் வயதானவர்களே அதிகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுற்றவர்களையே கொரோனா அதிகம் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் வயதானவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், முதியவர்கள் ஒரு போதும் வீட்டை  விட்டு வெளியில் வரக்கூடாது. அறுவை சிகிச்சைகளை சில காலம் தள்ளி வைக்கலாம். கோயில்கள், சந்தைகள் போன்ற கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

வீட்டில் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடலாம். உறவினர் அல்லது நண்பர்களுடன் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாக பேசலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலைகள், நடைபாதைகள் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான கையுறைகள், முகக்கவசங்களை அணியவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News