செய்திகள்
டாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்
கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் கிடைக்காத விரக்தியில் கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவனந்தபுரம்:
கொரோனா இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் கடந்த அதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ளதால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் மார்ச் 25-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குடரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (38). மதுபான பிரியரான இவர் ஊரடங்கு காரணமாக மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதில் இருந்தே மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மதுபானங்கள் கிடைக்காததால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற சுரேஷ் நேற்று இரவு அவரது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் கன்னூல் மாவட்டம் அஞ்சரகன்டி பகுதியை சேர்ந்தவர் விஜில் (28). மதுபான பிரியரான இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
மாநிலத்தில் மதுபானக்கடைகள் மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர் நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை உறவினர்கள் விஜிலின் வீட்டிற்கு சென்றபோது அவர் தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் எர்ணாகுளம் மற்றும் திரிசூர் மாவட்டங்களை சேர்ந்த மதுபான பிரியர்களான இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுபான கடைகள் மூடப்பட்டதால் கேரளாவில் கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.