செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க திகார் சிறை கைதிகள் 356 பேர் ஜாமீனில் விடுதலை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திகார் சிறையில் இருந்து 356 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. வீடுகளிலும், கடைகளிலும் ஒருவருக்கொருவர் போதிய இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சிறைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருக்கும்போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திகார் சிறையில் இருந்து 356 கைதிகளை விடுவிக்க சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 45 நாள் நிபந்தனை ஜாமீனில் 356 சிறைக் கைதிகளும், அவசர பரோல் மூலம் 8 வார காலத்துக்கு 63 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநில சிறைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுமார் 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.