செய்திகள்
நடுவழியில் தவிக்கும் சரக்கு வாகனங்கள் (கோப்புப்படம்)

நடுவழியில் தவிக்கும் 70 லட்சம் சரக்கு வாகனங்கள் - லாரி அதிபர்கள் சங்கம் தகவல்

Published On 2020-03-28 12:34 GMT   |   Update On 2020-03-28 12:34 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 70 லட்சம் சரக்கு வாகனங்கள் நடுவழியில் நிற்பதாக இந்திய லாரி அதிபர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து இன்றுடன் 4-வது நாட்கள் ஆகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்திய லாரி அதிபர்கள் சங்கமான மோட்டார் காங்கிரஸ் தலைவர் குல்கரன்சிங் அத்வால் கூறியதாவது:- நாட்டில் 1 கோடியே 20 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இதில் 60 சதவீத வாகனங்கள் அதாவது 70 லட்சம் வாகனங்கள் ஆங்காங்கே நடுவழியில் நிற்கின்றன.

இவை அத்தியாவசிய பொருட்கள் அல்லாத அதிவேகமாக விற்பனையாகும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகும்.

இவற்றுக்கு அனுமதி அளிக்காததால் ஆங்காங்கே சாலைகளில் நிற்கின்றன. இந்த வாகனங்கள் பெரும்பாலும் அதிகவேக நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றி வருவது, பின்னர் தயாரிக்கப்பட்ட பொருட்களை அங்கிருந்து வெளியே கொண்டு செல்வது போன்ற பணிகளை செய்து வந்தன.

இவை அத்தியாவசியமற்றது என கருதி தடுத்து விட்டார்கள். ஏராளமான லாரிகள் சரக்குகளை இறக்கிவிட்டு திரும்பி வந்தவை ஆகும். அவையும் முடக்கப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டுமே 30 லட்சம் லாரிகள் நிற்கின்றன. அவற்றில் பல லாரிகளில் பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை குறிப்பிட்ட இடத்திற்கு உடனே கொண்டு செல்லவில்லை என்றால் அவை நாசமாகிவிடும் நிலை இருக்கிறது.

எனவே ஆங்காங்கே நிற்கும் வாகனங்களை குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News