செய்திகள்
ரிசர்வ் வங்கி ஆளுநர்

கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published On 2020-03-27 06:15 GMT   |   Update On 2020-03-27 06:15 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லா வகையான கடன்களின் தவணைகளை செலுத்த 3 மாதங்களுக்கு அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-  

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.  சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 

கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசக் காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News