செய்திகள்
அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யுங்கள்... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் மக்களிடையே ஒருவித அச்சமும், பதற்றமும் உருவாகி உள்ளது. இதனால் கடைகளிலும், காய்கறி சந்தைகளிலும் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்குகின்றனர்.
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளின் தடையற்ற செயல்பாடு மற்றும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.