செய்திகள்
நிர்மலா சீதாராமன்

கொரோனா வைரஸ் - தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2020-03-21 16:51 GMT   |   Update On 2020-03-21 16:51 GMT
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி:

உலக நாடுகள் இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் ஆட்கொண்டுள்ளது.  இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் எதிரொலியாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கான அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் கவனம் செலுத்தி, தூய்மையை உறுதிசெய்ய வேண்டும்.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான முதல் தவணையாக மத்திய அரசு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேபோல், ஆந்திர பிரதேசத்திற்கு 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.431 கோடியும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான 2வது தவணையாக ரூ.870.2363 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான முதல் தவணையாக ஒடிசாவுக்கு ரூ.186.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அருணாசல பிரதேசத்திற்கு 2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.16.215 கோடியும், 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான 2வது தவணையாக ரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  ஆக மொத்தம் இந்த மாநிலங்கள் அனைத்திற்கும் ரூ.2,570 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News