செய்திகள்
ம.பி.யில் கமல்நாத் ராஜினாமா - இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
மத்தியபிரதேசத்தில் முதல் மந்திரி பதவியை கமல்நாத் ராஜினாமா செய்துள்ளதை அம்மாநில பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் முதலில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களை நேற்று நள்ளிரவில் ஏற்றதாக அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு கமல் நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மத்திய பிரதேச மக்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவித்தார்.
இந்நிலையில், கமல்நாத் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அம்மாநில பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதுதொடர்பாக, முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி உள்கட்சி பூசலால் கவிழ்ந்துள்ளது. அதற்கு நாங்கள் எதையும் செய்ய முடியாது. ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் அல்லது கவிழ்க்கும் விளையாட்டில் நாங்கள் இல்லை என்பதை உணரவேண்டும். அத்தகைய நிலைமைக்கு என்ன காரணம் என்று காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.