செய்திகள்
உமர் அப்துல்லா விடுதலை குறித்து விரைவாக முடிவு எடுங்கள் - மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்
உமர் அப்துல்லாவை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவு எடுங்கள் அல்லது அவர் தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
புதுடெல்லி:
மேலும், அப்துல்லாவை விடுதலை செய்வது தொடர்பான நிலைப்பாட்டை அடுத்த வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் நிலைமை தற்போது சீரடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லாவை விடுதலை செய்வதாக இருந்தால் உடனடியாக விடுதலை செய்யுங்கள் அல்லது அப்துல்லாவின் சகோதரி தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அப்துல்லாவை விடுதலை செய்வது தொடர்பான நிலைப்பாட்டை அடுத்த வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்துள்ளது.