செய்திகள்
கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் - பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் அறிவுரை
ஒவ்வொருவரும் தொகுதிக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகெங்கிலும் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 107 ஆக அதிகரித்து இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 114 ஆகவும், இன்று 125 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊடகங்களின் பணியையும் பாராட்டினார்.