செய்திகள்
உத்தவ் தாக்கரே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய காட்சி.

அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை: உத்தவ் தாக்கரே

Published On 2020-03-17 01:59 GMT   |   Update On 2020-03-17 01:59 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் வருதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் எந்த ஒரு நகர எல்லையையும் மூடும் திட்டம் அரசிடம் இல்லை. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அங்கு வழிபாடு தொடரலாம். ஆனால் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது நல்லது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்த 15 முதல் 20 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும். எனவே மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங் கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை ( இன்று) முதல் மக்கள் மாநில தலைமை செயலகமான மந்திராலயாவுக்குள் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகர்ப்புறங்களை போல கிராமப்புற பள்ளிகளையும் மூட உத்தரவிடப்படுகிறது. அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News