செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

Published On 2020-03-11 08:13 GMT   |   Update On 2020-03-11 09:56 GMT
ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 காங்கிரஸ் எம்பிக்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி கலவரம் தொடர்பாக உடனே விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. 

ஒருகட்டத்தில் மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.



இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று இந்த விவகாரத்தை எழுப்பினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது. இதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், 7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். எனவே, 7 எம்.பி.க்களும் கூட்டத்தொடரில் இனி பங்கேற்க முடியும்.
Tags:    

Similar News