செய்திகள்
கொரோனா வைரஸ் பற்றி ஆதாரமற்ற அறிவுறுத்தல்களை அந்த அமைப்பு வெளியிட்டதா?
கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் அறிவுறுத்தல்களை யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தொடர்புடைய விவரங்கள் அடங்கிய அறிவிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் அறிவிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியகமான யுனிசெஃப் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
யுனிசெஃப் வெளியிட்டதாக கூறப்படும் அறிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய எட்டு வழிமுறைகள் இடம்பெற்று இருக்கின்றன. மேலும் அவற்றை சரியாக பின்பற்றினாலே கொரோனா வைரஸ் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரல் தகவல் புகைப்படம் மற்றும் குறுந்தகவல் என இருவிதங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் அறிவிக்கை பற்றிய எவ்வித தகவலும் யுனிசெஃப்ட் சமூக வலைதளம், வலைப்பக்கம் உள்ளிட்டவற்றில் இடம்பெறவில்லை. இதே தகவல் ஆஃப்ரிக்காவிலும் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையினை யுனிசெஃப் வெளியிடவில்லை என அதன் செய்தி தொடர்பாளரே தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல்களை யார் வெளியிடுவது என்பதை நன்கு ஆய்வு செய்ய யுனிசெஃப் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பற்றிய வைரல் அறிவிக்கையை யுனிசெஃப் வெளியிடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.