செய்திகள்
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக டெல்லியில் தம்பதியர் கைது
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த தம்பதியரை போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுடெல்லி:
குடிரியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும்,
200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் டெல்லி போலீசார் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக ஜஹான்ஜெப் சமி - ஹினா பஷிர் பேக் என்ற தம்பதியரை இன்று கைது செய்தனர்.
டெல்லி ஜாமியா நகர் பகுதியில் கைதான இவர்களுக்கும் இந்தியாவில் இருந்தவாறு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்துவரும் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா குறிப்பிட்டுள்ளார்.