செய்திகள்
மும்பை அமலாக்கத்துறை அலுவலகம்

பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

Published On 2020-03-08 02:22 GMT   |   Update On 2020-03-08 02:24 GMT
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் இன்று கைது செய்துள்ளது.
புதுடெல்லி:

யெஸ் வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது .
 
இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் இன்று கைது செய்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
Tags:    

Similar News