செய்திகள்
மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்

டெல்லி கலவரம் - சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு

Published On 2020-03-03 22:48 GMT   |   Update On 2020-03-03 22:48 GMT
டெல்லி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பலியானார்கள்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், ‘தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டெல்லி கலவரம் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் போலி பிரசாரம் செய்வதை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வுசெய்து கலவரம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் 7,600 மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்’ என கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News